சென்னை: “வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவரின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்” என்று பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சித்திரபுத்திரத் தேவர், சிவஞான நாச்சியார் தம்பதியினருக்கு 1715-ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பூலித்தேவர் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தப்பப் பூலித்தேவர். பூலித்தேவர் சிறுவயதிலேயே வீரம் மற்றும் இறை நம்பிக்கையும் மிகுந்தவராக விளங்கியுள்ளார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன்முதலாக 1751-ல் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
இவரது பிறந்த நாளை முன்னிட்டு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவரின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய் மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவரின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.