டிடிவி.தினகரன் | கோப்புப்படம்

 
தமிழகம்

“நாங்கள் டெல்லிக்குச் சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார்” - டிடிவி.தினகரன் கருத்து

செய்திப்பிரிவு

“நாங்கள் டெல்லிக்குச் சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று, தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

          

இதைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் பாமக தலைவர் அன்புமணியும் நேற்று டெல்லி புறப்பட்டனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது: அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது.

அந்தக் கூட்டணிக்கு தேசிய தலைவர் அமித் ஷா. அவரை பழனிசாமி சந்தித்தார். என்னை டெல்லிக்கு வருமாறு அமித் ஷாவிடம் இருந்து 4 நாட்களுக்கு முன்பாகவே அழைப்பு வந்துள்ளது. கூட்டணி குறித்து பேசச் செல்லவில்லை.

முதல்வர் ஸ்டாலின் கூறுவது போல், தமிழகத்துக்கு நிதி பெற்றுத் தரவும் செல்லவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்க முடியுமா? இது கூட முதல்வருக்கு தெரியவில்லை. அதோடு மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுத்தாலும், அதை நீங்கள் கபளீகரம் செய்து விடுகிறீர்கள். அதனால் தான் தமிழக மக்கள் உங்களை மாற்றுவதற்கு துடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அதிமுக தலைமையில் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க நான் டெல்லி செல்கிறேன். இந்தத் தேர்தல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையே நடக்கும் போட்டியாகத் தான் இருக்கும். முதல்வர், டெல்லிக்கும், தமிழகத்துக்கும் இடையே நடக்கும் போட்டி என்று கூறுகிறார்.

மத்தியில் 2004-2014 மத்திய கூட்டணி ஆட்சியில், திமுக இருந்த போது, பணம் கொழிக்கும் துறைகளை வாங்கிக் கொண்டு, எப்படி தமிழகத்துக்கு அவப்பெயர்களை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியிலும், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலும் தான் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது.

நமது தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதை தடுக்காமல் அமைதி காத்தவர்கள் இவர்கள். நேற்று பழனிசாமி டெல்லி சென்றார். இன்று நான் செல்கிறேன். நாங்கள் டெல்லிக்குச் சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். பயத்தில் ஏதேதோ பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT