திருச்சி: திமுகவை விமர்சிப்பவர்கள் வரலாற்றை தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார். அந்த காலத்தில் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் கிடையாது. பொதுக்கூட்டம் நடத்த முடியாது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்கொணர்வு மனுவும் கிடையாது என்ற மோசமான நிலை இருந்தது. மிசா காலகட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வயது ஒன்று. நானும் மிசாவில் கைதானேன்.
மிசாவில் கைதானவர்களின் தியாகத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. 1976-ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது, ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சிறையில் சிறைக்காவலர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
பெரிய வரலாற்றை கொண்டுள்ள தலைவரை கொச்சைப்படுத்துவது நாகரிக அரசியல் கிடையாது. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துவிட்டோம் என்பதற்காக இப்படி பேசக் கூடாது.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தவெகவினர் பேசியதை வைத்து தமிழக மக்களுக்கு மிசா குறித்து எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என நினைக்கிறோம்.
அதிகாரப் பொறுப்புகளைப் பெற எதையும் செய்ய தயாராக இருக்கும் இன்றைய அரசியல் காலகட்டத்தில், ஆட்சியை இழக்க தயாராக இருந்த கட்சி திமுக. எனவே, தவெக அமைச்சர்கள், திமுகவை விமர்சிப்பவர்கள் முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிக்க வேண்டும் என்றார்.