அதிமுக கூட்டணியில் தேர்தல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தான எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறது ஆளும் திமுக. இன்னமும் சொந்தக் கட்சியை தேர்தலுக்காக தயார்ப்படுத்தும் பணிகளிலேயே அக்கட்சி துரிதமாக இருக்கும் நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி-யிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
ஐந்தாண்டுகள் நிறைவில், மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தந்திருக்கிறோம் என்ற திருப்தி இருக்கிறதா?
நிச்சயமாக. மிகச் சிறந்த, அருமையான ஆட்சியைத் தந்திருக்கிறோம். எல்லாத் தரப்பு மக்களும் மகிழ்வோடும் மனநிறைவோடும் இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றதுமே, “எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்தே நல்லாட்சி தருவோம்” என்று சொன்னார் முதல்வர். அதுதான் அண்ணாவின் பாணி. அதன்படி, எல்லாருக்கும் எல்லாம் என்பது போல் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைத் தரும் ஆட்சியாக இது இருக்கிறது. திட்டங்கள் என்பது நாட்டுக்கும் மக்களுக்குமானது. அந்த வகையில், 5 ஆண்டுகளில் மனநிறைவான ஆட்சியைத் தந்திருக்கிறது திமுக.
ஆனால், சில விஷயங்களில் சொன்னதைச் செய்யாமலும் விட்டுவிட்டது திமுக என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதே..?
அதாவது... அரசாங்கம் கையில் மந்திரக் கோல் எதுவும் இல்லை. நாங்கள் பொறுப்பேற்ற போது, மிகுந்த நிதிப்பற்றாக்குறை இருந்தது. அதையெல்லாம் சமாளித்து திட்டங்களை பெரிய அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம். குற்றம் சொல்பவர்கள், எவ்வளவு செய்தாலும் இன்னும் பாக்கி இருக்கிறது என்று தான் சொல்வார்கள். ஒரு பெரிய வெள்ளைச் சட்டையில் சின்னதாய் ஓர் ஓரமாக எதாவது இருப்பதைச் சொல்வது போல் தான் இது. அரசை பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகள். இப்படித்தான் பேசுவார்கள். ஆனால், உண்மை மக்களுக்குத் தெரியும்.
அப்படியானால், ஆட்சிக்கு எதிரான மனநிலை அறவே இல்லை என்று சொல்கிறீர்களா?
இல்லை என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்குமானால் அவர்கள் எங்களுக்கு எதிரான மனநிலையில் தான் இருப்பார்கள். இன்னொரு கட்சியின் அரசாங்கத்தை முழுமையாகப் பாராட்டி விட்டால் அப்புறம் அங்கே ஜனநாயகம் இருக்காது. அதனால், அவர்களுக்கான உரிமையில் பேசுகிறார்கள். ஆனால், அதில் உண்மை இருக்கிறதா, நியாயம் இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.
பிறகு எந்த நம்பிக்கையில், “நாங்கள் தான் நூற்றுக்கு இருநூறு சதவீதம் ஆட்சி அமைப்போம் என்கிறார் பழனிசாமி?
நூற்றுக்கு நூறு தான் போடமுடியும்; இருநூறெல்லாம் போட முடியாது. யாருமே தாங்கள் தோற்றுவிடுவோம் என்று சொல்லிவிட மாட்டார்கள். ஆனால், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கக் காரணம், மக்கள் என்ன காரணத்துக்காக எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறோம். மக்களின் தேவைகள் என்ன என்பதை முன்கூட்டியே அறிந்து அதையெல்லாம் அவர்களைத் தேடிப்போய் வழங்கி வருகிறோம்.
நடிகர் விஜய்யை மையப்படுத்தியே தமிழக அரசியல் கட்டமைக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நாங்கள் ஒரு பேருந்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். எங்களை நம்பி அதில் 100 பேர் பயணம் செய்கிறார்கள். அவர்களை பத்திரமாக இடம் சேர்ப்பதற்கு கவனமாக அந்தப் பேருந்தை இயக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதில் தான் நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.
விஜய்யை வைத்து திமுக-வை நிர்பந்திக்க நினைக்கிறதோ காங்கிரஸ்?
இதெல்லாம் கற்பனை. காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நான் நெருங்கிப் பழகி வருபவன். அப்படியான எண்ணவோட்டமே அவர்களுக்கு இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது உணர்வுபூர்மான, மனமொத்த, தெளிவான சிந்தனையுடன் பயணிக்கும் கூட்டணியாக இருக்கிறது.
பிரவீன் சக்கரவர்த்தி, திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏதும் குழப்பம் உண்டாக்க நினைக்கிறாரோ?
நான் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அமர்கிறேன்... அவர்களோடு அளவளாவுகிறேன். அதனால் அவர்களுடைய மனநிலை எனக்குத் தெரியும்.
விஜய்யை ‘கேம் ஸ்பாய்லர்’ என விமர்சித்திருக்கும் பியூஷ் கோயல், அவரை பாஜக-வினர் யாரும் விமர்ச்சிக்க வேண்டாம் என்றும் சொல்லி இருக்கிறாராமே?
இதற்கான விளக்கத்தை அவரிடமே நீங்கள் கேட்கலாம்.
திராவிடக் கட்சிகளில் ஒன்றை உறவாடியும் இன்னொன்றை களமாடியும் பாஜக அழிக்க நினைக்கிறது என்கிறார்களே..?
எங்களோடு அவர்கள் களமாட வரலாம். ஆனால், இது அவர்களுக்கான களமே அல்ல. எந்த ஆட்டத்துக்குப் போனாலும் அந்த விளையாட்டைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்; அந்த மைதானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அவர்கள், குழப்பம் விளைவிக்க நினைத்து ஈடுபட்ட எந்தக் காரியமும் இங்கே ஈடேறவில்லை. காரணம், ஒற்றை மொழியாக நாங்கள் வளர்த்து வைத்திருக்கிற சமூக நல்லிணக்கம். இங்கே, சாதி - சமயங்களைக் கடந்து மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ்வதால் அவர்களின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை; பலன் அளிக்காது.
கூட்டணி தர்மத்துக்காக பல விஷயங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கிறதா திமுக?
அப்படி எல்லாம் கிடையவே கிடையாது. கூட்டணியில் இருக்கும் அனைவருமே ரொம்பவே இணக்கமாக, சுமுகமாக, ஒரு குடும்பக் கூட்டணியைப் போலத்தான் இருக்கிறோம். அதை பொறுக்க முடியாதவர்கள் தான் கற்பனைக் கதைகளைக் கிளப்புகிறார்கள்.
இத்தனை நாளும், இறந்தவர்களின் வாக்குகள் மூலமாகவே திமுக ஆட்சிக்கு வந்ததாக அதிமுக-வும் பாஜக-வும் செய்யும் பரப்புரைக்கு திமுக தக்க பதில் சொல்லாமலே இருக்கிறதே?
அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தவறான வாக்குகள் உள்ளனவா, எங்களுக்கான வாக்குகள் விடுபட்டுள்ளனவா என்பதை எல்லாம் கவனமாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதெல்லாம் தெரியாமல், பேசுகிறவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். அதைக்கூட செய்யாமல் அவர்கள் என்ன செய்வார்கள்?