புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் ஆகியோர்.
கேளம்பாக்கம்: புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் கவுரி ரமேஷ் தலைமை வகித்தார். புதுப்பாக்கம் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ஜெயகவுரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா. சரவணன் ஆகியோர் பங்கேற்று 600 இளங்கலை மாணவ, மாணவிகளுக்கும், 30 முதுகலை மாணவ, மாணவிகளுக்கும் பட் டங்களை வழங்கினர்.
அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது, வழக்கறிஞர் தொழில் உன்னதமானது. இத்தொழிலில் வழக்கறிஞர் பேசுவதற்கு முன்பாகவே அவர் எப்படி என்று மதிப்பீடு செய்து விடுவார்கள். எனவே தோற்றம், கம்பீரம் இவை அனைத்தும் முக்கியம். நீதிமன்ற வழக்கறிஞர் உடைக்கு மதிப்பு உண்டு. அதை எப்போதும் நாம் மரியாதையுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மரியாதை என்பது பலவீனம் அல்ல. அது ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய பலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேசும் விதம், அமைதி, குரல் இவை உங்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றத்தில் நாம் குரலை உயர்த்தி பேசி வாதாடினால் ஜெயித்து விடுவோம் என்று எண்ணி விடாதீர்கள். அமைதியாக பேசி வாதாடி வெற்றி பெற்ற விஷயங்கள் அதிகம் உண்டு. சத்தமாக வாதாடினால் வெற்றி பெற முடியாது, சரியான முறையில் வாதாடினால் தான் வெற்றி பெற முடியும். கடந்த காலங்களை விட தற்போது உள்ள கால கட்டத்தில் சட்டக் கல்வி வேகமாக வளர்ந்து வருகிறது.
சட்டத்தை ஆழமாக படிக்க வேண்டும். தீர்ப்புகளை முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் அதிகமாக வாதாடுவது கூட சில நேரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே துல்லியமாக, முக்கியமானதை சுருக்கமாக வாதாடினாலே வெற்றி தரும். நேர்மையாக. உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நீதிமன்றமும் நீதிபதிகளும் உங்களை நம்புவார்கள். பணம் படைத்தவர்களாக இருந்தாலும், எளியவர்களாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். அனைவரையும் சமமாக மதிப்பது நற்பண்பு. இவ்வாறு அவர் கூறினார்.
பட்டறைப் பெரும்புதூர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, பேராசிரியர்கள். அலுவலக பணியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.