பழநி: கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, 2024 மே 7-ம் தேதி முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ‘இ-பாஸ்’ நடைமுறை அமலில் உள்ளது. இருந்தும், ஆண்டுதோறும் அனுபவிக்கும் சிரமங்கள் இந்த ஆண்டும் தொடர்வதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோடை சீசன் தொடங்கிய நிலையில் கொடைக்கானலில் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, வார நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அரைகுறையாக சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்பும் நிலை உள்ளது.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் மற்றும் ரோஜா பூங்கா அருகில் தற்காலிக வாகன நிறுத்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் போதுமானதாக இல்லாததால் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம். இது தவிர, சுற்றுலா இடங்களில் போதுமான கழிப்பறைகள், குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
மேலும், சீசனை முன்னிட்டு திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸாரை தற்காலிக பணியாக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.