பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ நடத்தி பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்புக்கு வருகிறார்.
வாகனத்தில் ரோடு ஷோவை தொடங்கி, மணிமேடை சந்திப்பு, அண்ணா விளையாட்டரங்கம் வழியாக வடசேரி எம்ஜிஆர் சிலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.
பின்னர் மாலை 6 மணியளவில் ரோடு ஷோவை முடித்துக் கொண்டு நாகர்கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அவர், அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
ரோடு ஷோவுக்கு பின்னர் பிரதமர் பொதுமக்களிடம் உரை நிகழ்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தேஜ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நாகர்கோவில் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இவர்களை ஒரே மேடையில் நிறுத்தி, அவர்களுக்கு பிரதமர் ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரோடு ஷோ நடைபெறும் சாலையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வாரியாக தொண்டர்கள் நின்று பிரதமரைப் பார்க்க தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சாலையின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு பலமுறை ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் பயணிக்கும் சாலையில் இன்று மதியம் 1 மணி முதல் பிரதமர் இங்கிருந்து புறப்படும் வரை எவ்வித வாகனமும் செல்ல அனுமதி இல்லை. மேலும், நாகர்கோவில் சுற்று வட்டாரத்தில் இன்று ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.