தமிழகம்

தமிழக நிதிநிலை என்ன? - தவெக அரசின் வெள்ளை அறிக்கை சொல்லும் 6 ஆய்வு முடிவுகள்

வேட்டையன்

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ளது. இதில் 6 ஆய்வு முடிவுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதன் விவரம்:

2021-22-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான கோவிட் காலத்திற்குப் பிந்தைய ஐந்து ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை எவ்வாறு இருந்துள்ளது என்பதை முந்தைய ஒன்று முதல் எட்டு அத்தியாயங்களும் விரிவாக ஆய்வு செய்துள்ளன. இந்த விரிவான ஆய்வின் பயனாக ஆறு முதன்மையான ஆய்வு முடிவுகள் தற்போது நமக்குக் கிடைத்துள்ளன.

1) முதலாவதாக, 01.04.2021 அன்று இருந்த மாநிலத்தின் நிலுவைக் கடன் அளவு 5.13 இலட்சம் கோடி ரூபாயிலிருந்தது. 313.2026 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் தோராயமாக இரண்டு மடங்கு உயர்ந்து. 10 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடுகையில் நிலுவையிலுள்ள கடனின் விகிதம், கோவிட் காலத்திற்குப் பிந்தைய ஆண்டுகள் முழுவதிலும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே நீடித்து, 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலை கணக்குகளின்படி 28.3 சதவீதமாக இருக்கிறது.

கோவிட் பெருந்தொற்றின் உச்சகட்டத்திற்குப் பின்னர் இதனை கணிசமாகக் குறைப்பதில் இணை மாநிலங்கள் இலக்கை அடைந்திருந்தாலும், தமிழ்நாட்டில் அத்தகைய சீரமைப்பு ஏற்படவில்லை. மாநிலம் தற்போது எதிர்கொண்டு வரும் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையின் விகிதம் குறைந்து வரும் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்நிலைமை இன்னும் கூடுதல் கவலைக்குரியதாகிறது.

2) இரண்டாவதாக, வட்டி செலுத்துதலுக்கான தொகை, மாநிலத்தின் மொத்த வருவாய் வரவினங்களில் தோராயமாக 23 சதவீதத்தையும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் தோராயமாக 35 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது. 2025.26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி 67,050 கோடி ரூபாயாக உள்ள ஆண்டு வட்டிச் செலவினம். மாநிலத்தின் ஆண்டு மூலதனச் செலவினத்தை காட்டிலும் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது. புதிய சொத்துக்களை உருவாக்குவதற்கு செலவிடுவதை விட, கடந்த காலக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கே மாநில அரசு தற்போது அதிக அளவில் செலவு செய்து வருகிறது.

3) மூன்றாவதாக, வருவாய் பற்றாக்குறை, தற்போது ஒரு கட்டமைப்பு ரீதியிலானப் பிரச்சினையாக மாறிவிட்டது. 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி, மாநிலத்தின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிலையில் 78,324 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.2 சதவீதம் என்பதோடு இது, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பதிவான பற்றாக்குறையின் அளவைக் காட்டிலும் தொகையளவில் மிக அதிகமானதாகும். மாநில அரசு தற்போது முதலீட்டிற்காக அல்லாமல், அன்றாட நடப்பு செலவினங்களுக்கே கடன் வாங்கி வருகிறது.

4) நான்காவதாக, மாநிலத்தின் சொந்த வரி வசூல் திறன் சரிவைச் சந்தித்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய்க்கும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கும் இடையிலான விகிதம், 2021-22 ஆம் ஆண்டில் 5.93 சதவீதமாக இருந்து, 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி தோராயமாக 5.45 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, மாநில அளவில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகக் குறைந்த சதவீதம் என்பதோடு, கோவிட் பெருந்தொற்றிற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் ஒப்பீட்டு அளவுகோலாகக் கருதப்பட்ட ஏனைய இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவாகும்.

5) ஐந்தாவதாக, ஒட்டுமொத்த வருவாய் வரவினங்களில் பொறுப்பேற்றச் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் செலவினங்களின் சதவிதம், இணை தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் உள்ளது. இது, மூலதனச் செலவினங்கள் மற்றும் புதிய முதலீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை பெருமளவு குறைத்து. மொத்தச் செலவினத்தில் மூலதனச் செலவினத்தின் விகிதம், 11.8 சதவீதமாக உள்ளது. இது, ஒப்பீட்டு அளவுகோலாகக் கருதப்படும் நான்கு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவாகும்.

6) ஆறாவதாக, நிபந்தனைப் பொறுப்புகள், மாநிலத்தின் கடனின் உண்மையான நிலையை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தோராயமாக 13.18 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதோடு, மாநிலத்தின் நிதி நிர்வாகத்திற்குப் பெரும் நிதி அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

ஒட்டுமொத்தப் பாதிப்பு

இந்த ஆறு முடிவுகளும் தனித்தனியானவை அல்ல. ஒன்றோடொன்று தொடர்பில்லாத ஒன்றோடொன்று இவை அனைத்தும் பின்னிப்பிணைந்து, மாநில நிதி நிலைமையின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை மேலும் வேகப்படுத்தும் வெவ்வேறு வடிவங்களே ஆகும். வருங்கால தலைமுறையினர் சுமக்க வேண்டிய கடன் சுமையானது, தற்போது தவிர்க்கவே முடியாத ஒரு நிரந்தரப் பாதிப்பாக மாறிவிட்டது.

ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும், முந்தைய கடன்களுக்கான வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிதிப் பொறுப்புகள், குறைந்தது இன்னும் இருபது ஆண்டுகளுக்காவது நீடிக்கும். இந்தியாவின் பிற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையின் சாதகமான வரம்பு தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த காலத்திற்கு இருக்கும் நிலை உள்ளது. தற்போது அந்தச் சாதகமான வாய்ப்புக் காலம் மிக வேகமாக முழுமையடைந்து ஒரு முடிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

மாநிலத்திற்கு அவசியமாகத் தேவைப்படும் இந்த நிதிச் சீரமைப்பை குறுகி வரும் சாதகமான காலத்திற்குள்ளேயே நாம் செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை காரணமாக உழைக்கும் திறனுள்ளவர்கள் மீது பெரும் சுமை ஏற்படும். வருங்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிதிசார் நெருக்கடிகளின்போது, அதற்கு எதிரான நிதிக் கொள்கை சுழற்சியை அரசு மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் இது தற்போது முற்றிலுமாக முடக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் போட்டித்திறன் சரிவைச் சந்தித்துள்ள நிலைமை மிகத் தெளிவாகத் தெரிகிறது. கோவிட் பெருந்தொற்றிற்குப் பிந்தைய ஐந்து ஆண்டு காலக்கட்டத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் தங்களது நிதிநிலைக் குறியீடுகளை கணிசமாக மேம்படுத்தி அல்லது வலுப்படுத்தியுள்ள வேளையில், இந்த குறியீடுகள் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2026-27 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினம் சுமார் 27,800 கோடி ரூபாய் அளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் வருவாய் வரவினங்கள் 14,000 கோடி ரூபாய் அளவில் மிகையாகக் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரவு-செலவுத் திட்ட மாற்றங்களின் விளைவாக, வருவாய் பற்றாக்குறையானது இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த 46,696 கோடி ரூபாய் என்பதிலிருந்து 90,500 கோடி ரூபாய் வரை உயரும். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1.22 இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறையானது, சுமார் 164 இலட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்ட வாய்ப்புள்ளது.

இத்தகைய அதிகரித்த பற்றாக்குறையைச் ஈடு செய்வதற்காக நிதி ஆதாரங்களைத் திரட்டுவது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில், மின்சாரத் துறைக்கான 0.5 சதவீத கூடுதல் கடன்களையும் சேர்த்து, அதிகபட்சமாக எதிர்பார்க்கப்படும் கடன் வாங்கும் வரம்பு தோராயமாக 1.52 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஆகும். மேலும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பு 11,600 கோடி ரூபாய் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT