புளியரை அருகே கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டுசெல்வதற்காக அணிவகுத்து நிற்கும் லாரிகள்.
தென்காசி / நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிக்கப்பட்ட தடையால், மாற்றுப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு விதிகளை மீறி கனிமவளங்களைச் கொண்டு செல் கின்றன.
கேரள எல்லையில் உள்ள தென்காசி மாவட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி, கட்டுமான கற்கள் தகர்த்து எடுக்கப்பட்டு, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதையடுத்து கனிமவளங்கள் கொண்டுசெல்ல கடந்த ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது, குவாரிகளில் அளவைத் தாண்டி கனிம வளங்களை சூறையாடுவது, அதிக சக்தி கொண்ட வெடி வைப்பது,லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்வது, போக்குவரத்து நெரிசல், விபத்துகளில் உயிரிழப்புகள் போன்றவை அதிகரித்துள்ளன.
இதன்தொடர்ச்சியாக தென்காசி புளியரையில் வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை சோதனைச்சாவடிகளை இணைத்து, தென்காசி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டார். இதுகுறித்து, முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கூறும்போது, அரசின் ஒவ்வொரு துறையும் கையூட்டு பெற்றுக்கொண்டு உடந்தையாக செயல்படுவதால் தங்குதடையின்றி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்றார்.
களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் கனிமவளத்துடன் கேரளாவுக்குச் சென்றன. விபத்துகள் அதிகரித்தன. இதை கட்டுப்படுத்த குமரி எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். குமரியில் நான்குவழிச்சாலை பணி முடிந்த பின்னரே கனிமவள லாரிகளை அனுமதிப்பது குறித்து யோசிக்கலாம் என அப்போதைய ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டார்.
இதனால், மாற்றுப் பாதையாக புளியரை வழியாக லாரிகள்கேரளாவுக்குச் செல்கின்றன. மேலும், கன்னியாகுமரி - கேரளாசெல்லும் தேசிய நெடுஞ்சாலையைத் தவிர்த்து, கொல்லங்கோடு, கோழிப்போர் விளை,ஊரம்பு, களியல் போன்ற குறுக்கு சாலை வழியாக கனிமவள லாரிகள் கேரளாவுக்குச் செல்கின்றன. இதுகுறித்து, குமரி கனிமவளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நாற்கர சாலைப் பணிகளுக்கும், உள்ளூர் தேவைக்கும் மட்டுமே அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது” என்றனர்.