மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
சென்னை: “தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர். இங்கு, இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதி 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ஒரு லட்சம் (1,01,657.13) ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூர் ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2026ம் ஆண்டு மே 29ம் தேதியன்று அளித்த உத்தரவில், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்விடம் குறித்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தேனி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மார்ச் 2025-ல், “புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க, அகஸ்தியமலை நிலப்பரப்பு முழுவதும் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (சிஇசி) விரிவான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டது. அந்தக் குழு ஜூலை 2025 மற்றும் ஜனவரி 2026 ஆகிய மாதங்களில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 29, 2026 அன்று வெளியிட்ட உத்தரவில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தெளிவான, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (சிஇசி) அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள், வசதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உட்கட்டமைப்புகள் வன நிலத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும் வரை, வனப்பகுதியில் எந்தவொரு புதிய வணிக அல்லது வனம் சாராத திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது. இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்த, சிஇசி பரிந்துரைக்கலாம். ஆகஸ்ட் 28, 2026-க்குள் சிஇசி தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 1, 2026 அன்று நடைபெறும்” என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன உரிமைகள் சட்டத்தின்படி (2006), 13 டிசம்பர் 2005-க்கு முன்பாக வனப்பகுதிகளில் குடியிருந்த பழங்குடியினர் அல்லது குறைந்தது மூன்று தலைமுறைகளாக (அதாவது 75 ஆண்டுகளாக) வனப்பகுதிகளிலேயே வாழ்ந்து, வனத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் சில உரிமைகளைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.
நில உரிமை கோரும் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, உரிமைகளை அங்கீகரிக்கும் நடைமுறைகள் முழுமையாக முடிவடையும் வரை, வனப்பகுதியில் வசிக்கும் எந்தவொரு நபரையும் அவர் வசிக்கும் வன நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது என இச்சட்டம் (பிரிவு 4) உத்தரவாதம் அளிக்கிறது.
வனப்பகுதியில் வாழும் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளான பள்ளிகள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் போன்ற அரசு மேம்பாட்டுப் பணிகளுக்காக வனப்பகுதிகளை (ஒரு திட்டத்திற்கு 1 ஹெக்டேருக்கு மிகாமல்) பயன்படுத்திக்கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். தேனி மாவட்டம் மேகமலைப் பகுதி வாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.