அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி

 
தமிழகம்

கடையநல்லூர் தொகுதியில் கரையேறப் போவது யார்?

வெற்றியை தீர்மானிக்கும் இஸ்லாமியர் வாக்குகள்

செய்திப்பிரிவு

தென்காசி: கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 1,32,228 ஆண்கள், 1,35,272 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 2,67,517 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 364 வாக்குச்சாவடிகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாகவும், அதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர், நாடார், யாதவர், நாயக்கர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் அதிகமாக உள்ளனர்.

கருப்பாநதி அணையை தூர்வார வேண்டும், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. கடையநல்லூர் தொகுதியில் மதிமுக சார்பில் தி.மு.ராஜேந்திரன் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தவெக சார்பில் அப்துல் ஜலீல், நாதக சார்பில் அபூபக்கர் சித்திக் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன், மதிமுக துணை பொதுச் செயலாளராக உள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களைச் சொல்லி பிரச்சாரம் செய்யும் இவர், கடையநல்லூர் தொகுதியிலேயே தங்கியிருந்து அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன்

கடையநல்லூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்கப்படும், வனவிலங்கு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும், தேங்காய் உலர் களம் அமைக்கப்படும், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, இந்த தொகுதியில் தனது முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

கடந்த முறை திமுக அரசு தனது சில கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றும், மீண்டும் வெற்றி பெற்றதும் கடையநல்லூருக்கு போதுமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தென்காசி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றும் வாக்கு சேகரிக்கிறார். மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை கூறி பிரச்சாரம் செய்கிறார்.

தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல்

தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல், விவசாயிகளுக்காகவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியதாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவதாகக் கூறி பிரச்சாரம் செய்கிறார். முஸ்லிம்களுக்கு திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டும் இவர், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அரணாக தவெக இருக்கும் என்று சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபூபக்கர் சித்திக் கடையநல்லூர் தொகுதியில் தென்னை, வாழை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், விவசாய பயிர்கள் சேதத்துக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

நாதக வேட்பாளர் அபூபக்கர் சித்திக்

இத்தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் ஓட்டு உள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் ஓட்டுகளை குறிவைத்து வேட்பாளர்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தவெக, நாதக வேட்பாளர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் இந்த முறை வெற்றி பெறுவது யார்?, இஸ்லாமியர்களின் ஓட்டுகளை அதிகமாக யார் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT