தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்நாயக் | படம்: ஆர்.ரகு

 
தமிழகம்

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

அனலி

சென்னை: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்குப் பின்னர் தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.19) வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 4-ம் தேதி வீடு வீடாக எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கணக்கீட்டுப் படிவம் விநியோகித்தல், பூர்த்தி செய்து பெறுதல் மற்றும் பதிவு செய்யும் பணிகள் ஆகியவை டிச.4-ம் தேதி முடிவடைய இருந்தது.

ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, கணக்கீட்டு படிவம் பெறுவதற்கான அவகாசம் டிச.11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

டிச.11-ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம், கணக்கீட்டுப் படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் பணிகளுக்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அதாவது, டிச.14-ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

அதன் அடிப்படையில் டிச.19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வந்தது. மேலும், அத்துடன், கணக்கீட்டுப்படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி (இன்று) வெளியானது. இறந்தவர்கள், இரட்டை பதிவுகள், முகவரி மாறியவர்கள் என்று நீக்கப்பட்ட வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் விவரம்:

* குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

* வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3.98 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

* இறந்தோர் 26.9 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் 5.43 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT