நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு. படம்: அ.ஷேக்முகைதீன்
சென்னை/ திருநெல்வேலி: தமிழக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்.17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்யும். அந்த வகையில், பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடர் பிப்.17-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்று 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று 17-ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலம் பார்க்க முடியும். அமைச்சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகின்றன. விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், கடந்த ஜன.20-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.22-ம் தேதி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி பதில் அளித்தார்.
இதையடுத்து, மறு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட்டுக்காக பிப்.17-ம் தேதி மீண்டும் கூடுகிறது.
பேரவை கூட்டம் பெரும்பாலும், பிப்.20-ம் தேதி வரை நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால், இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.