தமிழகம்

திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையையே முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்: தமிழக பாஜக பதிலடி

தமிழினி

சென்னை: “திமுகவின் நிறைவேற்றாத பொய் வாக்குறுதிகள் அளித்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து துரோகம் செய்த மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையை முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்,” என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்த நிலையில், அதற்குப் பதிலடியாக இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கும், சமூக நீதிக்கான தொகுதி வரையறை மசோதாவை கருப்புச் சட்டம் என்று அவதூறு பேசி, எதிர்ப்பு தெரிவித்து தீயிட்டுக் கொளுத்தும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் நிறைவேற்றாத பொய் வாக்குறுதிகள் அளித்து தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து துரோகம் செய்த மக்கள் விரோத திமுகவின் கருப்பு தேர்தல் அறிக்கையை முதலில் தீயிட்டு கொளுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 மே 4-ம் தேதி அன்று தீய சக்தி திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து மக்கள் அகற்றப் போகின்றதை முன்னிட்டு, திராவிட மாடல் திமுக ஆட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் ஒரு பகுதியாக - தாங்களே தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தங்களுக்கு தாங்களே பிரியா விடை கொடுக்க கோலங்கள் போட்டு பிரிவுபச்சார விழாவை கனத்த இதயத்துடன் தமிழகம் முழுக்க நடத்தி வருவதைப் போல் இந்த கருப்புக்கொடி காமெடி கண்ணீர் தீ போராட்டம் அமைந்துள்ளது.

திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு எதிராக கோலங்கள் போட சொல்லி, நாடகங்கள் நடத்துகிறார்.

திமுகவிற்கு எதிரான மக்களின் கடும் கோபத்தை, அதிருப்தியை, தேர்தல் நாளன்று அமைதிப் புரட்சி செய்ய காத்திருப்பதை, திசை திருப்ப, ‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்பது போல தீ கருப்புக் கொடி கோலங்கள் என பிசுபிசுத்துப் போன தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி, ஆட்சிப் பறிபோகிறதே என்ற ஆத்திரத்தில், பதட்டத்துடன், அச்சத்துடன் அமைதியின்றி தவிக்கிறார்.

பாஜக மீண்டும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுத்தே தீர வேண்டும் என்கிற தீய நோக்குடன், ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை பாஜகவினர் மாற்றி விடுவார்கள் என திமுக, காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்தது போல, இப்போது சமூக நீதிக்கான தொகுதி மறுவரையறை மசோதாவை வைத்து அவதூறு அரசியல் செய்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று கருப்பு கொடி போராட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோலங்கள் போட்டு எதிர்ப்புகளை காட்டுங்கள் என்று தமிழக பெண் சமுதாயத்தை தூண்டிவிட்டு, தமிழ் தமிழர், தமிழகத்தை வாழவைத்த, வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பும் சதி திட்டத்திற்கு தமிழக பெண்கள் துணை போக மாட்டார்கள்.

‘சேலம் என்றாலும் ஸ்டீல்; ஸ்டாலின் என்றாலும் ஸ்டீல்’ என்று துருப்பிடித்த இரும்பாக திராவிட மாடல் ஆட்சியும் தானும் மாறி போனாலும், அழகான ஒப்பனையில், துக்ளக் பாணியில், நீட் ரகசியம் போல நம்ப முடியாத, செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளை ப்ளாப் ஸ்டார் (Flop Star) திமுக தேர்தல் அறிக்கையை - சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கை என்று கூச்சம் இல்லாமல் பொய் சொல்கிறார்.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் திராவிட மாடல் அப்பா பேசுகிறேன் என்று தேன் தடவுவது போல பேசி, அடுக்கடுக்காக பொய்கள் கூறி, தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளித் தந்து, மக்களை ஏமாற்றி விடலாம் என்ற இறுமாப்புடன் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கள், ஆசை வார்த்தைகள், உயிரைப் போக்கும் புதைகுழிகள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

எனவே பெண்களுக்கான 33 சத வீதம் இட ஒதுக்கீட்டை இதற்கு முறையை நோக்கத்திற்காக, தொகுதி வரையறை மசோதாவுக்கு எதிராக திமுக நடத்தும் முகமது பின் துக்ளக் நாடகங்களை மக்கள் புறக்கணிப்பார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீய சக்தியை திமுகவை வீழ்த்தி வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைப்பார்கள்.

இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்காகவும் நரேந்திர மோடி அரசு எடுக்கும் நல்ல செயல்பாடுகளை, மக்கள் விரோத காங்கிரஸ், திமுக, இண்டியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை கடந்து மக்கள் ஆதரவுடன் பாஜக நிறைவேற்றும்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT