தமிழகம்

தமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? - உதயநிதிக்கு பாஜக கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் குழந்தைகளின் மீது மும்மொழியை திணிப்பது ஏன் என்று கேட்டிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உண்மையிலேயே அது அவரின் ஆதங்கமாக இருந்தால், அவர் குடும்பத்தினர் நடத்தும் 'சன் ஷைன்' பள்ளியில் இனி மும்மொழி இருக்காது என்ற முடிவை எடுக்க அப்பள்ளி நிர்வாகத்தை வற்புறுத்துவாரா?

வசதி படைத்தவர்கள் மட்டும் மூன்று மொழியை கற்க வேண்டும், ஆனால், ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக் கூடாது என்ற மலிவான எண்ணம் ஏன்? மத்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.150 கோடியே ஒதுக்கிய நிலையில், ரூ.2,400 கோடியை செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுள்ளது புரிதல் இல்லாத ஒருவரின் ஆணவப் பேச்சையும், சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது.

தமிழ் மொழி வளர்ச்சி என்ற பெயரால் நிதி ஒதுக்கி ஊழல் செய்வது ஒன்றுதான் திமுகவின் தமிழ் வளர்ச்சிக் கொள்கை. உதயநிதிக்கு தைரியமிருந்தால் தமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அதனால் ஏற்பட்ட பயன் என்ன என்பது போன்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக அளிக்கட்டும். தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் அவர்கள் செய்த, செய்து கொண்டிருக்கிற தகிடுதத்தங்கள் வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT