தமிழகம்

மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

அனலி

சென்னை: மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டுள்ளது, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.

காவிரிப் பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும்.

ஆதலால், கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ அல்லது காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது” என்று முதல்வர் பேசினார்.

தொடர்ந்து முதல்வரின் தீர்மானத்தின் மீது அரசியல் கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். தீர்மானத்தின் மீது முதல் நபராக உரையாற்றிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், தீர்மானத்தை ஆதரித்தார்.

முதலாவதாக ஆதரித்த காங்கிரஸ்...

அமைச்சர் ராஜேஷ் குமார் பேசுகையில், “முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் உயிர்நாடி. அதனை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

காவிரி நீர் வழங்குவது குறித்து நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை மூன்று வழித்தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்து மேகேதாட்டு அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழகத்தின் பல பகுதிகளும் பாதிக்கும். கர்நாடக அரசின் ஒருதலைபட்மான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது,” என்று பேசினார்.

பிரேமலதாவின் யோசனை:

“தமிழகத்துக்கு மிக முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கப் போவதில்லை. அனைவரும் ஒன்றாகத்தான் இருப்போம். அந்தவகையில், தேமுதிகவும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது.

ஆனால், சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் பிரச்சினை, காவிரி நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.

தமிழக மக்களின் உரிமையை நாம் ஒவ்வொரு முறையும் சுற்றியுள்ள மாநிலங்களை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். அப்படியல்லாது, தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் என அனைவரும் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

தாய்ப்பால் போல் தண்ணீர் முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எனவே, மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதை போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையைப் பற்றி யோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் எங்கெல்லாம் நதிகளை இணைக்க முடியுமோ, அதைச் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளையும் தூர்வார வேண்டும். மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

உதயநிதி வைத்த கோரிக்கை:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சி மேகேதாட்டு அணை. அணை கட்டுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி.

கர்நாடகத்தில் அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அதை கடுமையாக எதிர்த்தார். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது.

2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமருக்கு அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் நிதி ஒதுக்கியவுடன் கண்டனம் தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிக்கும் திமுக உடன் நிற்கும்.

தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். இந்த தீர்மானத்தை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதைவிட, அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒன்றிணைந்து நேரடியாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, மதிமுக, தேமுதிக, பாமக, அதிமுக, திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. அதேவேளையில் அமமுக, பாஜக மட்டும் ஐயூஎம்எல் உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.

இதனையடுத்து, மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

உதயநிதி கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்:

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஆதரித்த பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி.

மேகேதாட்டு பிரச்சினைக்காக எனது தலைமையில் 26.05.2026 அன்று பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கருத்தை தீர்மானத்தின் 4-வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம்,” என்று கேட்டுக் கொண்டார். இதன்பின் திருத்தப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

SCROLL FOR NEXT