புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 என்.ஆர்.காங்கிரஸ், 1 பாஜக எம்எல்ஏ என 3 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. வருகிற 17-ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வுள்ளது
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தே.ஜ கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி மே.13-ம் தேதி பதவியேற்றார். இதை தொடர்ந்து அமைச்சர்களாக பாஜக சார்பில் நமச்சிவாயம், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றனர். இதில் மீதமுள்ள 3 அமைச்சர்கள் பதவிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்களும், பாஜகவுக்கு ஒரு அமைச்சர் எனவும் தேர்தலுக்கு முந்தைய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, புதிய அமைச்சர்களின் பட்டியலை வழங்கினார். இதில் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (பாஜக), ராஜவேலு (என்ஆர் காங்.) சிவகொழுந்து (என்ஆர்.காங்.,) ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரை செய்தார். அந்த கடிதத்தை ஆளுநர் கைலாஷ்நாதன், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.
குடியரசு தலைவரின் அனுமதி கிடைத்தவுடன் கடந்த 7-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி கிடைக்காததால் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய அமைச்சர்களாக ராஜவேலு, ராஜசேகரன், சிவக்கொழுந்து ஆகியோர்களை நியமிக்க அன்மையில் குடியரசு தலைவர் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து வருகிற 17-ம் தேதி 3 புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.