சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியவர்களைத் தாக்கி வழிப்பறி செய்த 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், பாலக்கரையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (34). இவர் கடந்த 19-ம் தேதி இரவு அவரது நண்பர்கள் சுரேந்தர் மற்றும் கவுதம் ஆகியோருடன் ஆயிரம் விளக்கு பகுதியில் அதிமுக வேட்பாளரான பா.வளர்மதிக்கு ஆதரவாக வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கினார்.
அப்போது அங்கு வந்த 4 பேர், ‘பணம் கொடுத்து வாக்காளர்களை கவர நினைக்கிறீர்களா?’ எனக் கூறி தனியாக அழைத்துச் சென்று தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.10,300, ஜிபே மற்றும் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.50,000 என மொத்தம் ரூ.60,300-ஐ பறித்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வினோத் குமார் மற்றும் நண்பர்களைதாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக தேனாம்பேட்டை நல்லான் தெருவைச் சேர்ந்த சதீஷ் (25), அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (28) மற்றும் கிண்டி லேபர் காலனி 4-வது தெருவைச் சேர்ந்த சந்திரன் (23) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.