​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்​மன்

 
தமிழகம்

நாகர்கோவில் விசாரணைக் கைதி மரணம்: சிறைக் காவலர்கள் மூவர் கைது

19 இடங்களில் காயம்: உடற்கூறு ஆய்வில் தகவல்

வேட்டையன்

நாகர்கோவில்: ​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யில் உயிரிழந்த விசா​ரணைக் கைதி சபரிவர்​மனின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் வடக்​கு ​தாமரைகுளம் அருகே நாராயணன்​புதூர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் 33 வயதான சபரிவர்​மன். இவர் அப்​பகு​தி​யில் கடை நடத்தி வந்​தார். கடந்த 9-ம் தேதி மதி​யம் 1.30 மணி​யள​வில் இவரது கடை​யில் தென்​தாமரகுளம் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

அப்போது அரசால் தடை செய்​யப்​பட்ட குட்கா பொருட்​கள் இவரது கடை​யில் இருந்​த​தாகக் கூறி, சபரிவர்​மனை கைது செய்து நாகர்​கோ​வில் சிறை​யில் அடைத்​தனர். கடந்த 4 நாட்​களாக அவர் விசாரணை கைதி என்ற நிலை​யில் இருந்​துள்​ளார்.

சிறை அறை​யில் நேற்று அதி​காலை​யில் சபரிவர்​மன் மயங்​கிய நிலை​யில் கிடந்​த​தாகக் கூறப்​படு​கிறது. போலீ​ஸார் அவரை ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​த​போது சபரிவர்​மன் ஏற்​கெனவே உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. இத்​தகவல் அவரது குடும்​பத்​தினருக்கு தெரிவிக்​கப்​பட்​டதும் அவர்​கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சபரிவர்​மனை போலீ​ஸார் பலமாக தாக்கி உள்​ள​தாக​வும், அவருக்கு எந்​த​வித நோய் பாதிப்​பும் கிடை​யாது எனவும் உறவினர்​கள் குற்​றம்​சாட்​டினர். மருத்​து​வ​மனை வளாகத்​தில் திரண்டு அவர்​கள் போராட்​டம் நடத்​தினர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட​வர்​களிடம் எஸ்​.பி. ஸ்டா​லின் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதையடுத்​து, போராட்​டம் கைவிடப்​பட்​டது.

நீதிபதி முன்னிலையில் உடற்கூறு ஆய்வு

இந்த சூழலில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

அதில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருந்தது தெரியவந்துள்ளது.

சிறைக் காவலர்கள் மூவர் கைது

சிறையில் விசாரணை கைது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​நாகர்​கோ​வில் கிளைச்​சிறை​யின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT