தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. முன்னிலையில் அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார். அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி: கட்சி பொறுப்பு கிடைக்காததால் விஜய் காரை மறித்து தர்ணா நடத்திய தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி அஜிதா ஆக்னல் நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு தான் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அஜிதா ஆக்னலுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை. மாறாக எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் என்பவருக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதிருப்தி அடைந்த அஜிதா ஆக்னல் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜய் காரை, தனது ஆதரவாளர்களுடன் மறித்து தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால், விஜய் அவரை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
இதனால் மன வேதனை அடைந்த அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
திமுகவில் இணைந்தார்
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், விஜய் தனது நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் என்பவரை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்தார்.
இதனால் அதிருப்தியில் இருந்த அஜிதா ஆக்னல் நேற்று மாலை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா ஆக்னல், ‘தவெகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் இல்லை. எனவே திமுகவில் இணைந்துள்ளேன்’ என்றார்.