தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்:
தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும். இதன்மூலம், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதே தமிழக அரசின் குறிக்கோளாகும். தமிழகத்தில் புதிய துறைமுகங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு ஆராயும். தமிழகம் தனது நிலையை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஒரு புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை வெளியிடப்படும்.
மாநிலத்தின் உற்பத்தி மற்றும் விநியோகத் தகுதிகளைப் பட்டியலிட்டு, முதலீட்டாளர்கள் உள்ளூர் சூழலை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு விரிவான டிஜிட்டல் தளமாக, தமிழ்நாடு தொழில் திறன் விவரப்பட்டியலை அரசு உருவாக்கும். வழிகாட்டி 3.0 அமைப்பின் முக்கிய அங்கமாக, தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் 3.0 மேம்படுத்தப்பட்ட வடிவில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டுத் திட்டங்களுக்கும் தேவையான அரசு அனுமதிகள், ஒப்புதல்கள், தடையின்மைச் சான்றிதழ்களை ஒருங்கிணைத்து, அவற்றை ஒரே இடத்திலேயே பெறலாம்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான மற்றும் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், சிப்காட் சார்பில், புதிய தொழிற்பூங்காக்கள் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில், சுமார் ரூ.3,200 கோடியில் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
தென் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும்திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் வின்வெளித் தொழில் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படும். இதன்மூலம், தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் டெக் மேம்பாட்டுக்காக, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்தாக்க நகரமாக அறிவகம் உருவாக்கப்படும். இந்நகரில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம், சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், குறைகடத்தி வன்பொருள் சோதனை ஆய்வகம், பல்துறை புத்தாக்க இன்குபேட்டர் மற்றும் நவீன குடியிருப்பு உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறும். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.