திருப்பரங்குன்றம் கோயிலில் நடந்த தள்ளுமுள்ளு.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் நவ.25-ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன் தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், நடப்பாண்டு மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த டிச.1 உத்தரவிட்டது.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் முழுவதும் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய நெய், காடாத்துணி போன்றவற்றை நேற்று பிற்பகல் கோயில் பணியாளர்கள் கொண்டு சென்றனர்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு, மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், மாலை 6 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் பரவியது.
இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்னணி, பாஜகவினர் மற்றும் பக்தர்கள் திரண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி கோஷமிட்டபடி, போலீஸாரின் தடைகளை அப்புறப்படுத்தி 16 கால் மண்டபம் வரை முன்னேறினர்.
அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸார் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். பின்னர் தடைகளை மீறி “வீரவேல், வெற்றிவேல், முருகனுக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியவாறு கோயிலை நோக்கி ஏராளமானோர் சென்றனர். தொடர்ந்து போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு என்று சிறிது நேரத்தில் அங்கு பரபரப்பு கூடியது. தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் 12 பேரை திருப்பரங்குன்றம் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு: இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்த 12 பேரில் முத்து முருகன் என்னும் ஒருவர் மட்டும்தான் தெரிவதாகவும், மீதமுள்ள 11 பேர் யார் என்று விவரம் கேட்பதற்காக பாஜக வழக்கறிஞர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். காவல் துறையினர் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும் காவல் நிலைய நுழைவு வாயில் கதவுகளை அடைத்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக நேற்று இந்து அமைப்பினர் கூடியிருந்தோம். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் காரணமாக சிலரை நள்ளிரவில் அராஜகமாக கைது செய்து கொண்டு வந்துள்ளனர். இப்போது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
வழக்கறிஞர் அம்மு பிரியா என்பவரின் தந்தை முத்து முருகன் என்பவரை இரவு நேரத்தில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அராஜகமாக கைது செய்திருக்கின்றனர். வழக்கறிஞரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல். அவரது ரத்த உறவுகளையாவது பார்த்த அனுமதிக்க வேண்டும் இதில் யாரும் குற்றவாளிகள் இல்லை. பாஜக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுவான பிரச்சனைக்காக போராடியவர்கள்.
பொது சொத்தை சேதப்படுத்தியது உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கைது செய்து சிறையில் அடைப்போம் நீங்கள் நீதிமன்றத்தில் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். முத்து முருகனைத் தவிர கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை. யார் இந்த தகவலும் சொல்ல மறுக்கிறார்கள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ஆன என்னையும் பார்க்க விட அனுமதிக்கவில்லை” என்றார்.
கைது செய்யப்பட்ட முத்து முருகனின் மகள் அம்மு பிரியா கூறுகையில், “நேற்று இரவு 2:30 மணி அளவில் வந்து அப்பாவை விசாரணைக்காக அலெக்ஸ் செல்வதாக கூறிய அனைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை அவரை வெளியிடவும் இல்லை, அவரை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. தற்போது தான் அவரைப் பார்த்து விட்டு வந்தேன்.
எனது அப்பா இதில் எதுவும் தலையிடவும் இல்லை. இவர் எதுவும் செய்யவும் இல்லை. ஆனால் தங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனது அப்பா சாமி கும்பிடுவதற்காக சென்றவர். அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை, அவருக்கும் இந்த வழக்குக்கும் இந்த சம்பந்தமும் இல்லை. எனது அப்பாவை பக்தராக பார்க்கவில்லை, அவரை குற்றவாளியாக பார்க்கிறார்கள்” என்றார்.