விசிக தலைவர் திருமாவளவன்

 
தமிழகம்

“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை” - திருமாவளவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஓரவஞ்சனை செய்வதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக நேற்று அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு, நாடாளுமன்றத்தை நடத்துவதற்கே விருப்பமில்லை. இப்போது நடைபெறும் கூட்டத் தொடரில், ஆளும் பாஜக-வினர் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை.

          

நூல்களில் இருந்தும், இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ராகுல் காந்தி பேசும் போது, வெளியிடப்படாத ஒரு நூலில் இருந்து பேசக்கூடாது என்ற காரணத்தை காட்டி அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி, கடந்த வாரம் கூட்டதொடரையே அவர்கள் நடத்தவில்லை.

இந்த வாரமும் அதே நிலை நீடிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம்; உரிமைக்குரல் எழுப்புவோம்.

தமிழகத்துக்கு கல்வி உள்ளிட்ட, பல துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை, இன்னும் ஒதுக்காமல் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத் தொடரின் போதும், மாநில வாரியாக கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யும் போது, தமிழகத்துக்கு மட்டும், ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.

பாஜக தவிர்த்த பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை, திட்டமிட்டு வஞ்சித்து, நிதிகளை ஒதுக்காமல், மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம் அந்த வரிசையில் ஒன்று. அதேபோல் மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கும் பாஜக அரசு ஓரவஞ்சனை செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT