விசிக தலைவர் திருமாவளவன்
சென்னை: “அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது உலகம் முழுவதும் வாடிக்கை ஆகியுள்ளது. அமைச்சரவையில் சேர்ந்துவிட்டோம் என்றவுடனேயே நாங்கள் இன்னொரு (தவெக) கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை,” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே இன்னொரு கூட்டணியில் (தவெக) இடம்பெற்று விட்டோம் என்று பொருளல்ல. ஆட்சி அமைக்க 2 இடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் விசிக ஆதரவு தர வேண்டும் என முதல்வர் விஜய்யிடமிருந்து வெளிப்படையாக கடிதம் வந்தது.
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அப்படித்தான் விசிக-வும் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தோம். பத்து நாட்கள் கழித்துதான் அமைச்சரவையில் இடம்பெறுவது என்ற முடிவை நாங்கள் எடுத்தோம்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா’ என கேட்டனர். அதற்கு நான், ‘ஆம், திமுக கூட்டணியில் தொடர்கிறோம்’ என்று தான் கூறினேன். ஜூலை 1-ஆம் தேதி கூட்டணி தொடர்பாக, ஆதரவு நல்கிய கட்சிகளுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆகவே, தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையவில்லை என்றுதான் பொருள். விசிக அமைச்சரவையில் இடம்பெற்ற உடனேயே திமுகவுக்கு நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதற்கு விடை சொல்லக் கூடிய வகையில் தான், நான் பதில் சொன்னேன். பதவி என்றவுடன் ஒரு கூட்டணியை உதறிவிட்டு ஓடிவிடவில்லை; எடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றையும் கூட்டணி தலைமையிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்; ஸ்டாலினை சந்தித்தும் பேசியிருக்கிறோம். அதைத்தான் நான் சொன்னேன்; திமுகவுடனான உறவு தொடர்கிறது; நட்பு தொடர்கிறது” என்றார்.
அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது தொடர்பான கேள்விக்கு, “அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாடிக்கை ஆகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட ஒருவர் தான் அப்படி செயல்படுகிறார் என சொல்ல முடியாது.
சமூக ஊடகம் வலிமையாக உள்ள இந்தச் சூழலில் , ஒவ்வொரு அசைவையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. இவை பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால் நாங்கள் சுட்டிக் காட்டுவோம். அமைச்சர்கள் அதை உள்வாங்கிக் கொள்வார்கள் அல்லது தேவைப்பட்டால் அதை தவிர்ப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.