டிடிவி தினகரன் | கோப்புப்படம் 
தமிழகம்

“திமுகவை திருப்திபடுத்த தமிழ் மன்னர்களை அவதூறு செய்கிறார் திருமாவளவன்” - தினகரன்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள்தான் காரணமா? திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை விசிக தலைவர் திருமாவளவன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.

          

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த தொல்.திருமாவளவன் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் தொல்.திருமாவளவன், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயரா என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT