கடலூர்: “காவிரி நீர் பிரச்சினை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முன்கூட்டியே சொன்ன இயக்கம் விசிக தான். தற்போதும் நான் கூறுகிறேன், காவிரி நீர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது நல்லது” என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியது: “தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திட்டமிட்டவாறு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம், பிறமொழி பேசும் தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமான உறவை பேணி பாதுகாப்பதும், ஒவ்வொரு மாநிலத்துக்குமான மாநில சுயாட்சி கோரிக்கையை மேலும் உரத்த குரலில் பேசுவதற்குமான ஒரு முயற்சி.
அண்மைக் காலமாக தமிழ்த் தேசியம் என்பது பிற மொழி பேசுவோருக்கு எதிரான அரசியல். பிற தேசிய இனத்துக்கு எதிரான வெறுப்பு அரசியல் என்ற அடிப்படையில் திரிபுவாதம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு வெறுப்பு அரசியலை இனத்தின் பெயரால் விதைக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த மாநில சுயாட்சியை இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப அதை தமிழ்த் தேசிய அரசியலான விசிக முன்வைக்கிறது. தனித் தமிழ்நாடு கோருவதுதான் தமிழ்த் தேசியம் என்பதில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்ட மொழி உரிமை, இன உரிமை, மாநில உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுப்பதும், ஒரு தேசிய இனத்தின் தனித்துவத்தை பாதுகாப்பதுவும் தவிர்க்க முடியாத தேவை. அதையே விசிக தமிழ்த் தேசியமாக பார்க்கிறோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகள் மாநில சுயாட்சிக்கான கோரிக்கையை எழுப்ப வேண்டும். மொழிவழி தேசியம் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தி தேசிய இனம், பிற தேசிய இனங்களும் ஐக்கியமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அந்த ஒருங்கிணைவோடு கூடிய மத்திய அரசு ஒரு கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும் என்கிற அடிப்படையில் விசிக இந்த மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அரசியல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாளை முதல்வர் தலைமையில் விசிக உள்ளிட்ட தோழமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மறுவரையறை குறித்த சட்டம் தேவையில்லை. அதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நடக்கும் கூட்டத்தில் விசிக பங்கேற்கிறது. திமுகவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. அழைப்பு விடுத்திருப்பது உண்மை என்றால், அதில் திமுக பங்கேற்பது அவசியமானது.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது என்ற தனித் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்திருக்கிறார். அதை விசிக வரவேற்று பாராட்டுகிறது.
புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள்தான் ஆகிறது. இது முதல் பட்ஜெட் தான். அடுத்தடுத்து வரக்கூடிய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள், பல திட்டங்கள் வரும். ஆகவே இந்த பட்ஜெட் குறித்து விசிக வேறு கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. நிறைவேற்றுவோம் என்ற உறுதியை தந்திருக்கிறார்கள். நிறைவேற்றுவார்கள். பட்ஜெட்டில் எந்தவொரு பழைய திட்டங்களையும் மாற்றவில்லை, திட்டங்களை கைவிடவும் இல்லை. பழைய திட்டத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள். பெயர் மாற்றம் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஒரு அரசு வைக்கிற பெயரை, இன்னொரு அரசு மாற்றுவது என்பது அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்று தான். அதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதை தவிர்க்க முடியாது.
காவிரி நீர் பிரச்சினை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முன்கூட்டியே சொன்ன இயக்கம் விசிகதான். தற்போதும் நான் கூறுகிறேன், காவிரி நீர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது நல்லது” என்று திருமாவளவன் கூறினார்.