பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

“முதல்வர் அலுவலக இடமாற்றப் பணி டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை” - நயினார் நாகேந்திரன்

செய்திப்பிரிவு

சென்னை: ‘முதல்வர் அலுவலக இடமாற்றப் பணிகள் தொடர்பான டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றப்படும் முதல்வர் அலுவலகத்துக்கான டெண்டர்களில், ஏகப்பட்ட விதிமீறல்கள் இருப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

தலா ரூ.2.41 கோடி, ரூ.2.01 கோடி மற்றும் ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில், ஏ, பி, சி என 3 பிரிவுகளை உள்ளடக்கிய 3 டெண்டர்களுக்கான அறிவிப்பு, கடந்த 13-ம் தேதி தினசரி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. விதிகளின்படி அடுத்த நாளே இணையத்திலும் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்க வேண்டும்.

ஆனால், 17-ம் தேதிதான் டெண்டருக்குரிய ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எதற்கு இந்த காலதாமதம்? அதிலும், இணையத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் ஆவணங்களில் மதிப்பீடுகள் குறித்த விவரங்கள் எதுவும் இடம்பெறாதது ஏன்?

‘நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்’ என்று கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், இந்த டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்காதது ஏன்?

ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க, 30 நாட்கள் வரை காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்த டெண்டர்களுக்கு மட்டும் ஏன் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது? ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதற்குள்ளாகவே, எதன் அடிப்படையில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன?

டெண்டர் குறித்த இந்தக் கேள்விகள் எல்லாம் வீண் வதந்திகள் என்று சட்டப்பேரவையில் கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதற்கான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT