சென்னை: நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி இருப்பது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வெகு நேர்த்தியாக செயல்படுத்தியதன் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது என்றும் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் புதுவையில் 91.2%, அசாமில் 85.6%, கேரளாவில் 78.2% வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை (SIR) வெகு நேர்த்தியாக செயல்படுத்தியதன் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்த வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாத இறந்து போனவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் என பல்வேறு குழப்பங்களால் ஒவ்வொரு தொகுதியிலும், மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு , வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக காண்பிக்கப்பட்டு, மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் உண்மை நிலையை உணர்த்தியதோடு, மக்களிடம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்த சீர்திருத்தத்தை, உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டிய கடமையும், பொறுப்பும் அனைத்து கட்சியினருக்கும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.