சென்னை: தாயுமானவர் திட்டத்தின் கீழ், சென்னையில் 18 மண்டலங்களில் இன்றுமுதல் 2 நாட்களுக்கு பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதியோர் மாற்றுத் திறனாளிகள் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் (இன்றும், நாளையும்) சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சேழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் கீழ், பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.