சென்னை: போக்குவரத்துத் துறையில் 400 ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக போக்குவரத்து துறையின் கீழ் நீண்ட காலமாக பணி யாற்றும் சுமார் 400 ஊழியர்களின்திடீர் பணிநீக்க நடவடிக்கை கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
பல ஆண்டுகளாக போக்குவரத்துத் துறை பணிகளில் தங்களை அர்ப்பணித்து, தங்களது இளமை காலத்தையும் உழைப்பையும் செலவிட்டவர்களை ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் வாழ்வாதாரம் அற்றவர்களாக மாற்றுவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.
போக்குவரத்துத் துறையில் சேவைகள் மற்றும் உரிமம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த இவர்களின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் போது, பணிநீக்கமே ஒரே தீர்வு என்ற நிர்வாக மனப்பான்மை ஏன் என்ற கேள்வி எழுகிறது.
400 ஊழியர்கள் என்ற எண்ணிக்கையின் பின்னால் 400 குடும்பங்கள் உள்ளன. அந்தக் குடும்பங்களின் உணவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள், வீட்டு வாடகை, கடன் சுமைகள் என அன்றாட வாழ்க்கையின் அத்தனை தேவைகளும் இருக்கின்றன.
எனவே, இந்த விவகாரத்தை வெறும் நிர்வாகப் பிரச்சனையாகக் கருதாமல், 400 குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிக முக்கியப் பிரச்சினையாக தமிழக அரசு அணுக வேண்டும்.
பணிநீக்க நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரத்தை உறுதி செய்வதோடு, தேவையான இடங்களில் மாற்றுப்பணி, மறுபயிற்சி அல்லது பணியிட மாற்றம் போன்ற மாற்று வழிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.