தளி எம்எல்ஏ ராமச்சந்திரன்
கிருஷ்ணகிரி: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 12 பேரை விடுதலை செய்து, மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பி.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியில் மாவட்ட நிர்வாகியாக இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், தளி போலீஸார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி, உடல் எரிந்த நிலையில், கர்நாடக மாநில மாலூல் மாவட்ட எல்லையில் பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து தளி போலீஸார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
மேலும், இவ்வழக்கில் தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி லதா தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மேலும், 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படாததால், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உட்பட 12 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.