சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் நடைபெற்ற ரூ.98 கோடி டெண்டர் முறைகேடுகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் சேர்த்து இருமாநகராட்சிகளிலும் அதிகாரிகளாகப் பணியாற்றிய, ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் எதிரான குற்ற வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசி்ன் பொதுத்துறைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அபய்குமார் சிங் ஆகியோர் தாக்கல் செய்த அறிக்கையில், “ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருக்கும் எதிரான விசாரணைக்கு மத்திய அரசிடமிருந்துஅனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை.
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்பட்டது” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.