மதுரை: வாடிப்பட்டி அருகே மழையின்போது, மின்சாரம் தாக்கி டீக்கடை உரிமையாளர், டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை வாடிப்பட்டி அருகே நீரேத்தான் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (60). இவர் ஆண்டிபட்டி பங்களாவில் சைவ, அசைவ உணவகத்துடன் டீக்கடையும் நடத்துகிறார். அக்கடையில் சோழவந்தானைச் சேர்ந்த பாலகுரு (50) என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்கிறார். நேற்று இரவு சோமசுந்தரம் மகன் ரஞ்சித்குமார் (35) மற்றும் டீ மாஸ்டர் பாலகுரு ஆகியோர் இரவுப் பணி செய்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு கடையின் முன்பாக இருந்த சீரியல் லைட்டுகளை டீ மாஸ்டர் பாலகுரு அவிழ்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாலகுருவை மின்சாரம் தாக்கியது, அவர் சத்தம் போடவே அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற ரஞ்சித்குமார் மீதும் மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸார் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீஸார் இருவரின் உடலை கைப்பற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.