பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று 9-ம் நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.3-ம் தேதி முதல் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, 23 ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் பணியாளர்களை குடும்ப உறுப்பினர்களுடன் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கடையடைப்பு போராட்டம் நடந்தது.