அமைச்சர் விக்னேஷ்

 
தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது விற்றால் 3 மாதம் சஸ்பெண்ட்: பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: “டாஸ்மாக் பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ரூபாய் கூடுதலாக வாங்கினால்கூட முதல் முறை, 3 மாதம் பணியிடை நீக்கமும், அடுத்த முறை நிரந்தரப் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள்” என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் அமைச்சர் க.விக்னேஷ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

> கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்.

> கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரூ.2.58 கோடியில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும். மின் ஆளுமை இணையவழி செயலியில் ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ரூ.1.69 கோடியில் முழுமையாக மின்னணுமயமாக்கப்படும். கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வலுவான மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும்.

> டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு நாளை முதல் (செப்.1) மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மேலும் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

> பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சீருடைகள், துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6,000 வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் தூய்மைப்பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகர கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி, பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புற கடைகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.

> டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி, வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை மற்றும் மாதத்துக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு ஆகியவை வழங்கப்படும். தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

> பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ரூபாய் கூடுதலாக வாங்கினால்கூட முதல் முறை, 3 மாதம் பணியிடை நீக்கமும், அடுத்த முறை நிரந்தரப் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள்.

SCROLL FOR NEXT