தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்
சென்னை: “திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை இந்து கலாச்சார உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்” என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது என்பது தமிழக இந்துக்களின் அடிப்படை சமய உணர்வு மற்றும் கலாச்சார உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டபோதுதான் மக்கள் தங்கள் ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், இந்துக்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.
சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, இந்துக்கள் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டனர். தமிழக மக்கள் கடந்த காலங்களில் இத்தகைய போக்கை நிராகரித்துள்ளனர். தற்போதைய அரசும் அதே பாதையில் செல்வது வருத்தமளிக்கிறது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம், அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்பதாகக் கருதலாம்.
ஆனால், மறுக்கப்படுவது இந்துக்களின் சமய உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி என்பதை அரசு உணர வேண்டும். இந்த விவகாரத்துக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த இளைஞர் பூரணச் சந்திரனின் தியாகத்தையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் ஒரு சட்டப் போராட்டமாகவோ அல்லது மத மோதலாகவோ மாற்றப்படக்கூடாது. மாறாக, இது இந்து சமூகத்தின் உணர்வுபூர்வமான மற்றும் கலாச்சார உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்.
எனவே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்குமாறும், இந்த நீண்டகால சமய நடைமுறையை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த உறுதி செய்யுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.