தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்
சென்னை: ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் அனைவரும் ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, விஜய்க்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ஆட்சி அமைக்க முழுமையான எண்ணிக்கை இல்லாததாலேயே, விஜய் 3 முறை சந்தித்த பிறகும் அவரை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ‘நீங்கள் எண்ணிக்கையோடு வாருங்கள், அனுமதி தருகிறோம்’ என்று ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் போதிய எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழிபோடுவது நியாயமா?
தேர்வுகளில் இத்தனை மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனும்போது, அவ்வளவு மதிப்பெண் பெறாமலே என்னை தேர்வு செய்யுங்கள் என்று கூறுவது சரியா? அதேபோல, எல்லோரும் வெளியே இருந்து விஜய்யை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, அவருக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். ‘‘தனிப்பெரும் கட்சியை ஆளுநர் அழைக்கவேண்டும்’’ என்று கூறிவிட்டு, பின்னணியில் பல முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தெரிவித்துவிட்டு, ‘மத்திய பாஜக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தருகிறது’ என்கின்றனர். அதிலும் உண்மைஇல்லை. எல்லோரும் தங்களதுசுயநலத்துக்காக தங்களது அரசியல் நகர்வை செய்துவிட்டு, ஆளுநர் மீதோ, பாஜக மீதோ பழி சுமத்துவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
முருகானந்தம் கேள்வி: இதேபோல, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயலும் விஜய்யை பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தீய சக்தியில் 10 எடுத்து, தூய சக்தியில் கலந்தால் என்ன சக்தி வரும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.