சென்னை: ஈரோட்டில் டிச.20-ல் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் இயக்கம் தமிழ் மாநில காங்கிரஸில் இணைய உள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மூப்பனார் ஆசியோடு, தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆண்டுகள் இயக்கப் பணி, மக்கள் பணி ஆற்றி 12-ம் ஆண்டில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறது.
காந்திய வழியில் கட்சியை நடத்தும் காமராஜர் மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தனது இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் இணைக்க உள்ளார். தமிழருவி மணியனை வியாழக்கிழமை (நவ.27) சந்தித்து நன்றி தெரிவித்தேன். ஈரோட்டில் டிச.20-ல் காமராஜர் மக்கள் இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸில் இணைக்கிறார்.
தமிழகத்துக்கு வரும் காலம் நல்ல காலமாக, வசந்தகாலமாக இருக்க வேண்டும். நல்லவர்கள், வல்வவர்கள், ஞானமானவர்கள், ஊழல் அற்றவர்கள், வெளிப்படை தன்மையோடு செயல்படுபவர்களின் துணை அனைவருக்கும் தேவை. இதுதான் வெற்றி பெறக்கூடிய வியூகம்.
நல்லாட்சி, தூய்மையான ஆட்சிக்கு இதுபோன்ற இணைவு அவசியம். அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, தேர்தல் வேளையில் அவர்களுக்குள் ஒரு வியூகத்தை அமைத்து, அதன் அடிப்படையில் பல முடிவுகளை எடுப்பது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.
அந்த வகையில், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். செங்கோட்டையனின் முடிவு ஏற்புடையது.
இதில் கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. தேர்தல் வியூகம் அடிப்படையில் கூட்டணி வெற்றிபெற பிரகாசமாக வாய்ப்பை ஏற்படுத்துகிறோம்.
அரசின் தவறான போக்கை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். அந்த தாக்கம் எதிர்மறை வாக்காக மாறும். பிஹாரில் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்களும் பின்பற்றும் நல்ல நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.