சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு ஜன.20ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் வெற்றித் தலைவர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்தக் குழு, வருகின்ற 20ஆம் தேதி (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.