அவினாஷ் குமார்
சென்னை: தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி.யாக உள்ள செந்தில்வேலன் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நியாயமாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில், முக்கிய நிர்வாக மாற்றங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் - ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அது மட்டுமின்றி, பல்வேறு காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரும் மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த செந்தில் வேலன் நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, காவல் துறை தொழில்நுட்ப சேவைப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள அவினாஷ் குமார் புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலர் உத்தரவு: தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் உளவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக கடைபிடிக்கின்றனரா, வாக்காளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்றுகண்காணிக்கும் முக்கிய பொறுப்புகள் உளவுத்துறைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.