தமிழகம்

தமிழ்நாடு விரைவு ரயிலின் 50-வது ஆண்டு விழா: பயணிகள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு விரைவு ரயிலின் 50-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னையில் பயணிகள், ரயில்வே அதிகாரிகள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சென்னை சென்ட்ரல் டெல்லி இடையிலான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 1976, ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்டது. வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1988 ஜூனில் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து தினசரி இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மொத்தம் 2,182 கி.மீ தூரத்தை 32 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்றடைகிறது.

இந்நிலையில், இந்த ரயில் இயங்கத் தொடங்கியதன் 50-வது ஆண்டு தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்தனர். இந்த ரயிலின் ஓட்டுநர்களை கவுரவித்தனர். சக பயணிகளும் இனிப்பு வழங்கினர். பயணிகள் ரயிலுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். டெல்லிக்கு புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸை ரயில் ஆர்வலர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT