தமிழகம்

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

தடதடக்கும் தாக்குதல் பிரச்சாரம்

எஸ்.விஜயகுமார்

திமுக - அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாதக என நான்கு முனை போட்டி நிலவுவதாக முன்பு பேசப்பட்டது. இந்த நிலையில், மூச்சுக்கு முந்நூறு முறை, “தவெக-வுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி. களத்திலேயே இல்லாத மற்றும் பலரைப் பற்றி நாங்கள் ஏன் பேசவேண்டும்?” என தவெக தலைவர் விஜய்யும் பேசினார்.

          

இதன் மூலம், அதிமுக களத்திலேயே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தார் அவர். ஆனால், திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் இப்போது நடக்கும் அதிரடி தாக்குதல் பிரச்சாரமானது அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, போட்டி திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் தான் என்ற இலக்கை நோக்கி நகர்த்தி வருகிறது.

தவெக-வைப் பொறுத்தவரை அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை விட விஜய் மீதான மக்களின் ஈர்ப்பு மட்டுமே அந்தக் கட்சியின் பிரதான சொத்தாக இருக்கிறது. இலவசங்களை எதிர்க்கும் நாதக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நிர்வாக மேலாண்மை என கவலைப்படுகிறது. அதனால் அந்தக் கட்சி யதார்த்த அரசியலை விட்டு ஒதுங்குகிறது. அதேசமயம், திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசு பொருளாக இருக்கிறது. ஸ்டாலின் வந்தால் சொன்னதைச் செய்வார், எடப்பாடி வந்தால் செய்வாரா? என்ற வாதப் பிரதிவாதங்களும் பெண்கள் மத்தியில் களைகட்டுகின்றன.

இந்த நிலையில், திமுக-வும் அதிமுக-வும் களத்தை தங்களை மையப்படுத்தி திருப்ப ஏதுவாக ‘தாக்குதல்’ விமர்சனத்தில் இறங்கி இருக்கின்றன. இதனால், மற்ற கட்சிகளின் பிரச்சாரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்த இரண்டு கட்சிகளின் பிரச்சாரங்கள் குறித்து மட்டுமே இப்போது மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

அதிமுக அணியில் பழனிசாமி மட்டுமே பிரச்சார பீரங்கியாக இருக்கிறார். திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், குடும்ப அரசியல் என இவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என திமுக தலைவரின் குடும்பமே வரிசைகட்டி வந்து பதிலடி கொடுக்கிறது.

இந்தப் பதிலுக்குப் பதில் பிரச்சாரத்தில் தங்களது சாதனைகளையும் வேதனைகளையும் சொல்வதை விட்டுவிட்டு இப்போது தனி மனித தாக்குதலும் தடதடக்கிறது. அது கொஞ்சம் தரம் தாழ்ந்தும் செல்வது வாக்காளர்களை சங்கடப்படவும் வைக்கிறது.

ஒருவிதத்தில் இந்தப் பிரச்சாரங்கள் மூலம் போட்டி எங்களுக்கும் திமுக-வுக்கும் தான் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது அதிமுக. ஆனால், இதே பாணியிலான பிரச்சாரங்கள் நீடிக்கும் பட்சத்தில், நீ, நான் என ஒருவரை ஒருவர் ஒருமையில் ’வாழ்த்திக்’ கொள்ளுமளவுக்கு களம் மாறினாலும் கவலைப்பட ஒன்றுமில்லை.

SCROLL FOR NEXT