தமிழகம்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவு அறிவிப்பு: 5 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 23 பேர் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 86 நாட்களுக்குப் பிறகு நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 5 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 23 வழக்கறிஞர்கள் பார் கவுன்சி்ல் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர எஞ்சிய 23 உறுப்பினர்களைத் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மொத்தம் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டின்படி 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 5 பெண் உறுப்பினர்கள் பதவிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் முன்னுரிமை அடிப்படையில் கடந்த 86 நாட்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நேற்றுடன் முடிவடைந்து முடிவுகள் அறிவி்க்கப்பட்டன.

அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதிய உறுப்பினர்களாக திருச்செங்கோடு சி.பரணிதரன்,சென்னை பி.எஸ்.அமல்ராஜ், சென்னை இ.பாலமுருகன், தூத்துக்குடி டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, நாமக்கல் ஆர்.அய்யாவு, தஞ்சாவூர் வி. கார்த்திகேயன், செஞ்சி கே.கதிரவன், சென்னை என்.விஜயராஜ், ஈரோடு எம். அருள்முருகன், சேலம் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, சென்னை ஆர்.சி.பால்கனகராஜ், சென்னை கே.தமிழ்வாணன், சென்னை ஆர்.கிரிராஜன், சென்னை கே.பாலு, திருச்சி எம். ராஜேந்திர குமார், மதுரை தாளை முத்தரசு, சென்னை எம். வேல்முருகன், சென்னை ஜி.மோகனகிருஷ் ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பெண் வழக்கறிஞர்களில் டி.பிரசன்னா, ஏ.ராஜேஸ்வரி, எல்.சுமதி, பி, சாவித்திரி, ஆர்.விஜய லட்சுமி ஆகியோர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2 நியமன பெண் உறுப்பினர்களை உச்ச நீதிமன்றம் விரைவில் நியமிக்கவுள்ளது.

SCROLL FOR NEXT