வழக்கறிஞர் அன்வர்தீன்

 
தமிழகம்

பழநி நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழந்ததில் சந்தேகம்: உயர் நீதிமன்றத்தில் புகார்

வெற்றி மயிலோன்

மதுரை: பழநி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் சிறையில் உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார், பழநி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்தனர்.

மனுக்களில், பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. பத்திரப்பதிவு நடைபெற்ற சார்பதிவு அலுவலகத்தின் வழக்கமான பதிவாளர், அலுவலக உதவியாளர், மாவட்ட பதிவாளர், பொறுப்பு சார் பதிவாளர் என அனைவரிடமும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டியதுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பத்திரப்பதிவு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே பத்திரப்பதிவு மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

அரசு வழக்கறிஞர், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். உரிய ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நில பதிவு மோசடிக்கான சதித்திட்டம் கடந்த மார்ச் மாதமே தொடங்கியுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், பழநி கோயில் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக. 24க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT