புதுடெல்லி: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தது. இதையடுத்து, மனுவை திரும்பப் பெற விரும்புவதாக திமுக தெரிவித்தது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘கரூரில் ஒரு கணக்கு வழக்கு உள்ளது. அதை முடிக்காமல் விடமாட்டோம். இதற்குப் பதிலடி கொடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று பேசி உள்ளார். அவரது பேச்சு புலன் விசாரணையில் தலையிடுவதாக உள்ளது.
இதற்கிடையே, ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று கூட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான உத்தரவுகள், ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் சிபிஐ புலன் விசாரணையை பாதிக்கும்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் புலன் விசாரணையை சிபிஐ நிறைவு செய்யும் வரை, தமிழக முதல்வர் விஜய், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையிலும், வழக்கு குறித்தும் பேச தடை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித நலத்திட்டங்களையும் சிபிஐயிடம் தாக்கல் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் வகுக்கும் விதிகளின்படி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். சாட்சிகள், ஆதாரங்களை கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
திமுக தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “உங்கள் கோரிக்கைகள் அனைத்துமே அரசியல் நோக்கம் கொண்டவை. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.
முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்டவர் என தெரிவித்தீர்கள். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த சிபிஐ பட்டியலில் முதல்வர் விஜய் பெயர் இல்லை. எனவே, உங்கள் வாதம் தவறானது.
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும் என்றால், அவர்களின் பேச்சு சுதந்திரத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக உதவிகளை வழங்குவது, வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என நீதிமன்றம் கருதவில்லை.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், பதிலுக்கு நீங்கள் கருத்து தெரிவியுங்கள். ஆனால், அதை ஒரு வழக்காக தொடுத்து உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள். அரசியல் எதிரிகளின் கருத்துகளுக்கு எதிராக எப்படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்?
எனவே, இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்ய விரும்புகிறோம். நாங்கள் தள்ளுபடி செய்யட்டுமா அல்லது நீங்கள் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று தெரிவித்தனர். இதையடுத்து, திமுக தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதன்மூலம், முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கோ, அங்கு பேசுவதற்கோ, நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கோ எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.