தமிழகம்

ஜெகத்ரட்சகனின் சொத்து பறிமுதல் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

சென்னை: அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சில்வர் பார்க் என்ற நிறுவனத்தின் பங்குகளை, ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் வாங்கியதாக புகார் எழுந்தது.

ரூ.33 கோடிக்கு வாங்கப்பட்ட அந்தப் பங்குகளை அவர் தனது மனைவி, மகன்களுக்கு மாற்றியதில் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

          

இதையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதுகுறித்து சுங்கத் துறை ஆணையர் விசாரணை நடத்தினார்.

அதில், சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க ஜெகத்ரட்சகன் அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் யாரும் பணம் தரவில்லை என்பது தெரிய வந்தது. எனினும், அமலாக்கத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது. அத்துடன் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத், சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ‘‘ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

முறையாக சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் இந்த சொத்து பறிமுதல் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை 2 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப் படுகிறது’’ என்று கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT