சீமான் | கோப்புப்படம்
புதுடெல்லி: அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சரக டிஐஜியாக இருந்தவர் வருண்குமார். இவர் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின்பேரில் அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிடுவதாகவும், இது தொடர்பாக சீமான் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த நவம்பரில் ரத்து செய்தது.
விசாரணை தள்ளிவைப்பு: இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வருண்குமார் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு இதை விசாரித்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சீமானுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று (ஏப்.4) தள்ளிவைத்தனர்.