சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி (சிதம்பரம் பிள்ளையின் மகன்) வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் ஆகியவை பாஜக சார்பில் வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியானதும் முறைப்படி வேட்பாளரை அறிமுகப்படுத்த உள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள், ஜான் பாண்டியனின் தமமுகவுக்கு 1, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளிலும், அக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.