புதுவை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக, புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்றைய தினம் (நவ.27) டித்வா புயல் உருவானது. இந்தப் புயல் புதுச்சேரியை நோக்கி நகரும் என்றும் இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக புதுவை கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, புயல் காரணமாக மீன்வளத்துறை உத்தரவின் பேரில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், மீனவர்கள் தங்களது படகுகளை தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.