மேகேதாட்டுவில் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன்
கிருஷ்ணகிரி: “மேகேதாட்டுவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, இரும்பு கம்பிகள் நடப்பட்டு அணை கட்டுமானம் நடப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது” என ஓசூரில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதி மேகேதாட்டுவில் நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கனகபுரா, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 10 கி.மீ கீழ் நோக்கி ஆயிரம் அடி ஆழத்தில் அர்காவதி மற்றும் காவிரி ஆறுகள் ஒன்றாக இணையும் இடம் சங்கமம் ஆகும். இப்பகுதி சுற்றுலா தளமாக உள்ளது.
சங்கமத்திலிருந்து தமிழகம் நோக்கி காவிரி ஆறு ஓடத் தொடங்குகிற 3வது கி.மீட்டரில் மேகேதாட்டு என்கிற இடம் உள்ளது. இங்கு உயர்ந்த இரு மலைக்குன்றுகளுக்கு இடையே குறுகிய இடம் வழியாக தமிழக எல்லையில் காவிரி நுழையும் இடத்தில் மேகேதாட்டு அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தற்போது, மலையடிவார சாலையிலிருந்து 150 அடி ஆழத்தில் ஆற்றின் தளமட்டத்திற்கு செல்ல புதிதாக படிக்கட்டுகள் அமைத்து உள்ளனர்.
மேலும். தரைமட்டத்தில் அணை கட்டுவதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு இரும்பு கம்பிகள் கருங்கல் பாறையில் நடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அடர்ந்த வனப்பகுதி மற்றும் யானைகள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அணை கட்டுமானத்தை நியாயப்படுத்தும் விதமாக பொது மக்கள் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேகேதாட்டுவில் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன்
இதற்கென சிறப்பு பேருந்து மூலம் சங்கமத்திலிருந்து அழைத்து சென்று வருகின்றனர். இது, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தயார் நிலையில் உள்ளதை வெளிப்படுத்துகிற விதமாக அமைந்துள்ளது. எனவே மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை இணைந்து மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை பாதுகாப்பதற்கு தொடர்புடைய மாநில முதல்வர்களை கொண்டு பிரதமர் தலைமையில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை வள பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என சென்னையில் இருந்து கூறுவதை விட்டுவிட்டு இங்கு நேரில் வந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் உயர்மட்டக்குழு உறுப்பினர் ஓசூர் நடராஜன், திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.